24.11.11

இலவசங்கள் - வைரமுத்து

இலவசத்தில் வாழப் பழகியவர்கள்
மதுரசத்தில் மூழ்கிப் போனார்கள்.

உழைத்த தலைமுறை உளுத்த தலைமுறை
ஆக்கப் பட்டு விட்டது.

துய்ப்புக் கலாசாரம் உழைக்கும் நேரத்தை
உறிஞ்சி விட்டது.

உழைக்க முடியாத ஊனமுற்றவர்களுக்கும்,
கைவிடப்பட்ட முதியவர்களுக்கும்,
அநாதைக் குழந்தைகளுக்கும்,
ஆதரவற்ற நோயாளிகளுக்கும் தானே
இலவசம் பொருந்தும் ?

உற்பத்தி பெருக்காத இலவசம்
உற்பாதம் தானே விளைக்கும் ?

மதுக்கடை வாசல்களில் -
தவணை முறையில் செத்துக்
கொண்டிருக்கிறார்கள்
நம் விவசாயத் தொழிலாளிகள்.

மது என்பது உலகக் கலாசாரம் தான்.
ஒழிக்க முடியாது தான்;
மனித சமுதாயத்தின் பழம் பானம் தான்.

ஆனால் -
அருந்துபவனுக்கும் -
அருந்தப்படுவதற்குமான இடைவெளியில்
இருக்கிறது மதுவின் நன்மை – தீமை.
பெரும்பாலும் -
மேட்டுக்குடி மக்கள் மதுவை அருந்துகிறார்கள்.
ஆனால் உழைக்கும் மக்களை – மது அருந்துகிறது.

மேல் தட்டு மக்களின் உபரிப் பணத்தில்
கை வைக்கும் மது -
அடித்தட்டு மக்களின் -
உணவுப் பழக்கத்திலேயே கை வைக்கிறது.

தங்களுக்கு எதிராய் இந்தியர்கள்
கத்தி ஏந்தி விடக்கூடாது என்பதற்காகத் தான்
கள்ளுக்கடை திறந்தார்கள் வெள்ளையர்கள்.

புட்டிக்குள் அடக்கி வைத்திருந்தார்கள் -
தங்களுக்கு எதிரான பூதத்தை.
ஜனநாயக நாட்டில் -
பூதம் மட்டும் இன்னும் புட்டிக்குள்ளேயே
இருக்கிறது.

நன்றி : வைரமுத்து

No comments: